Sunday, 11 December 2016

அரசியல் வாரிசு - வாரிசு அரசியல்

அரசியல் வாரிசு - வாரிசு அரசியல்
------------------------------------------------------------

அரசியல் வாரிசு - வாரிசு அரசியல் இரண்டும் ஒன்றல்ல.  ஒரு தலைவர் தனது காலத்திலேயே தன்னுடைய அரசியல் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல இன்னொரு நபரை முன்னிறுத்துவது அரசியல் வாரிசு.  அப்படி முன்னிறுத்தப்படுபவர் மகனாகவோ மகளாகவோ மனைவி தோழியாகவோ இருக்கவேண்டும் என அவசியமில்லை.  யார் வேண்டுமானாலும் அரசியல் வாரிசாக வரமுடியும்.  வாரிசு அரசியல் என்பது வெற்றிபெற்ற தலைவரின் இடத்தை அவரது உறவுகளோ நட்புகளோ எவ்வித தகுதியுமின்றி பெறுவதாகும். 

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என நான் இன்னமும் நம்புவதால் ஜனநாயகத்திற்கு தங்கள் மக்களை பழக்கியவர்களாக தேசிய அளவில் நேருவையும் தமிழக அளவில் அண்ணாவையும் நன்றியுடன் நினைவு கூறுவேன்.  இவ்விரு தலைவர்களுமே தங்களுக்கு பிறகு இவர் தான் தங்களுது வாரிசு என யாரையும் அடையாளம் காட்டவில்லை.  அதேசமயம் தங்கள் காலத்திலேயே வருங்கால தலைவர்கள் உருவாவதை அனுமதித்தார்கள். 

சரி இப்போது தமிழக அரசியலுக்கு வருவோம்.  அறிஞர் அண்ணா மறைந்தபிறகு கட்சியில் நெடுஞ்செழியன்,  கருணாநிதி,  நாஞ்சில் மனோகரன் போன்ற அடுத்த தலைவர்கள் இருந்தனர்.  கட்சியின் Protocol படி முதலிடம் அண்ணா,  இரண்டாவது நெடுஞ்செழியன் மூன்றாவது கருணாநிதி இருந்தனர்.  அண்ணா மறைவுக்கு பிறகு முதல் இடத்திற்கு யார் செல்வதென நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் போட்டி.  கருணாநிதி க்கு மற்ற தலைவர்களின் ஆதரவு நெடுஞ்செழியனை விட அதிகமாக இருந்ததால் அவர் முதல் இடத்திற்கு வருகிறார்.  அடுத்த தேர்தலில் அண்ணா இருந்து பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றியை அதுவும் இன்றுவரை முறியடிக்கப்படாத ஒரு பெரிய வெற்றியை அடைந்து தனது தேர்வுக்கு நியாயம் சேர்க்கிறார். 

அதன்பிறகு எம்ஜியார் பிரிந்து சென்று அதிமுக வை ஆரம்பித்து தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்.  எம்ஜியார் மறைவுக்குப் பிறகு யார் அந்த கட்சியின் தலைமை ஏற்பவர் என்பதில் சிக்கல் வருகிறது.  தமிழ்நாட்டில் அப்போதுதான் முதன்முறையாக வாரிசு அரசியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் கருணாநிதி தான் வாரிசு அரசியலை ஆரம்பித்தார் என்ற பொய் பலரது மனதிலும் பதியவைக்கப்பட்டுள்ளது.  கருணாநிதி வாரிசு அரசியலை முடிந்தவரை தவிர்த்துவந்துள்ளார் என்பதை பிறகு சொல்கிறேன்.  எம்ஜியார் மறைவுக்கு பின்னர் கட்சியின் ப்ரோட்டாகால் படி டாப் 5 அல்லது டாப் 10 இடங்களில் இருந்து எவருமே தலைவராக உருவெடுக்க முடியவில்லை.  இரண்டு அணியாக பிரிகிறது.  ஒன்று ஜானகி அணி . இன்னொன்று ஜெயலலிதா அணி.  ஒருத்தர் எம்ஜியாரின் மனைவி.  இன்னொருத்தர் தோழி.  இதுதான் வாரிசு அரசியல்.  தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கட்சி அதிமுக தான் என்று அதனால் தான் சொல்கிறேன். 

ஜெ - ஜானகி போட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்று கட்சித்தலைமையை அடைகிறார்.  எம்ஜியாரால் எப்படி அடுத்த தலைவரை உருவாக்க முடியாமல் போனதோ அதேபோல ஜெயலலிதா வாலும் தனக்குப் பிறகு அடுத்த தலைமையை உருவாக்க முடியவில்லை அல்லது அவருக்கு விருப்பமில்லை.  ஆனால் எம்ஜியாராவது இரண்டாம் கட்ட தலைவர்களை அனுமதித்தார் ஜெ அதுகூட செய்யவில்லை.  ஜெயலலிதா தனது கட்சியில் Protocol என்ற ஒன்றையே இல்லாமல் செய்தார்.  இதன்காரணமாக ஆட்சி கட்சி இரண்டிலுமே அதிகாரங்கள் ஒரே நபரிடமே குவிக்கப்பட்டன.  இதைத்தான் ராணுவ கட்டுப்பாடு என ஊடகங்கள் பெருமையாக பேசுகின்றன.  அதனால் தான் அந்த கட்சியில் இன்று தலைமைக்கான போட்டியே வரவில்லை.  எப்படி ஜெயலலிதா எம்ஜியாரின் தோழி என்ற காரணத்தால் தலைமைக்கு வந்தாரோ அதே காரணம் தான் சசிகலாவுக்கும்.  ஆனால் ஜெவுக்கும் சசிகலாவுக்கும் சின்ன சின்ன வித்தியாசங்கள் உள்ளன . எம்ஜியார் ஜெயலலிதா வை நேரடியாக அரசியல் செய்ய அனுமதித்தார்.  ஜெயலலிதா சசிகலா வை அப்படி செய்ய அனுமதிக்கவில்லை . அதனால் தான் இன்று அவரை கட்சித் தொண்டர்களில் பலருக்கு (சரி சிலருக்கு)  பிடிக்கவில்லை.  இன்னொன்று கருணாநிதி நெடுஞ்செழியனோடு போட்டியிட்டு வென்றதை போல ஜெயலலிதா ஜானகியுடன் போட்டியிட்டு வென்றதைப் போல ஒரு போட்டி சசிகலாவுக்கு கட்சிக்குள்ளே இல்லாமல் போனது.  இது அவருக்கு கண்டிப்பாக மைனஸ் பாயின்ட் தான்.  நேரடி அரசியல் வாரிசாக இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதென்பது வேறு.  ஆனால் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாரிசாக யாரையும் அனுமதிக்கவில்லை.  அப்படியிருக்கும்போது வாரிசு அரசியல் மூலமாக தலைமைக்கு வருபவர் போட்டியில் ஜெயித்து வந்தால் அவரது காலம் நெடுந்தொலைவு பயணிக்கும்.  இதற்கு உதாரணம் ஜெயலலிதா.  அதிமுக சசிகலாவை தேர்வு செய்யும்பட்சத்தில் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக வாரிசு அரசியலை நுழைக்கிறது. 

சரி அப்படியென்றால் ஸ்டாலின் செய்வது என்ன அரசியல்?  கருணாநிதி தன்னுடைய மகனை அரசியலில் நுழைக்க விரும்பினார்.  ஆனால் அப்படி வாரிசு அரசியல் மூலமாக மட்டுமே நுழைவதை அவர் விரும்பவில்லை.  ஒரு பகுதியின் இளைஞரணி உறுப்பினராக பதினெட்டு வயதில் தன்னுடைய அரசியல் கேரியரை துவக்குகிறார் ஸ்டாலின்.  அதன்பிறகு எமர்ஜென்சி சிறைவாசம்,  எம்எல்ஏ,  இளைஞரணி செயலாளர்,  மேயர்,  உள்ளாட்சித் துறை அமைச்சர்,  துணை முதல்வர்,  பொருளாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் என நாற்பத்தைந்து வருடங்களில் அவர் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார். 

ஸ்டாலின் மிக இள வயதிலேயே அரசியலுக்கு வந்ததால் அவரால் தனது தந்தை கருணாநிதியை அப்பாவாக அணுகுவதை விட கட்சித்தலைவராகவே அணுக பழகிவிட்டார்.  கலைஞரோடு இன்று கனிமொழி தயாநிதி மாறன் போன்றவர்கள் பேசி பழகுவதற்கும் ஸ்டாலின் பேசி பழகுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எளிதாக உணரலாம்.  பாடிலாங்குவேஜ் வித்தியாசம் கண்டிப்பாக தெரியும்.  கனிமொழி க்கு அவர் அப்பா தான் அதேபோல தயாநிக்கு அவர் தாத்தா.  அந்த நினைப்பிலேயே அவர்கள் இன்னமும் பழகுவதால் தான் தனது அப்பா தாத்தா விடம் வெளிப்படும் Body language வெளிப்படுகிறது.  மாறாக ஸ்டாலின் ஆரம்பகாலம் தொட்டே கலைஞரை கட்சித்தலைவராகவே பார்த்து பழகிவிட்டதால் அவருக்கு இன்றளவும் கலைஞரை தனது தலைவர் என்ற body language வோடு தான் அணுகுகிறார் .

அழகிரி,  கனிமொழி இவர்களுமே கூட கருணாநிதியின் வாரிசுகள் தான்.  ஆனால் இவர்களுக்கு கட்சியில் இல்லாத செல்வாக்கு ஸ்டாலினுக்கு மட்டும் இருக்கிறது என்றால் அது கலைஞரின் மகன் என்பதால் மட்டுமே இல்லை.  ஆரம்பகாலத்திலிருந்து படிப்படியாக மேலே வந்து இன்று கலைஞரின் அரசியல் வாரிசாக உயர்ந்து நிற்கிறார்.  ஸ்டாலினை எதிர்கால தலைவராக அறிவிப்பீர்களா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டபோது " திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல " என்று கலைஞரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் வெறும் ஒப்புக்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல . வட இந்தியாவில் நாற்பது வயதுக்குள்ளாகவே முதல்வர் பதவியை எட்டி விடுகிற வாரிசு அரசியல் நிலவுகிற நம் நாட்டில் அவர் இத்தனையாண்டுகளாக இன்னமும் கட்சியின் லகானை தனது கைக்குள்ளேயே வைத்திருப்பற்கு இரண்டு காரணம் உண்டு.  ஒன்று கலைஞரின் திறமை.  இன்னொன்று ஸ்டாலினின் பொறுமை. 

எம்ஜியார் தனது அரசியல் வாரிசை உருவாக்கவில்லை,  ஜெயலலிதா வும் உருவாக்கவில்லை.  ஆனால் அந்த கட்சியில் அவர்களின் மறைவுக்கு பின்னர் வாரிசு அரசியல் தான் தலைதூக்கியது.  கலைஞர் அரசியல் வாரிசாக ஸ்டாலினை மிக நீண்டகால திட்டமிடலுடன் உருவாக்கியுள்ளார்.  அவர் கொஞ்சம் வாரிசு அரசியலை அனுமதித்திருந்தாலும் கூட தனக்குப் பிறகு எவ்வித தகுதியும் தயார்படுத்தலும் இல்லாமல் வாரிசு அரசியல் தலைதூக்குவதை தடுத்துள்ளார்..!

No comments:

Post a Comment