Saturday, 16 July 2016

காமராஜரை ஏன் திராவிட அபிமானிகள் புகழ்கிறார்கள்?

கேள்வி : திராவிடத்தை அதிலும் குறிப்பாக திமுக வை திட்டுவதற்காக,  காமராஜரை புனிதராக்கி திமுக வை சகட்டுமேனிக்கு திட்டுகிறது ஒரு கும்பல்.  ஆனால் உங்களைப் போன்ற திராவிட இயக்க அனுதாபிகளோ பதிலுக்கு காமராஜர் புகழ் பாடுவதின் அர்த்தம் என்ன??

பதில் : ரொம்ப சிம்பிள். சர்தார் வல்லபாய் படேல் காங்கிரஸ்காரர் தான்.  ஆனால் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் அவரை இன்று அனுதினமும் சிலாகிக்கவில்லையா?  அதுபோல காங்கிரசிலிருந்த திராவிட ஸ்லீப்பர் செல் எங்கள் ஐயா காமராஜர். 

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே திராவிட கொள்கைகளான சமூகநீதி,  அனைவருக்கும் கல்வி,  குலக்கல்வி கைவிடல் போன்றவற்றை தனது ஆட்சியில் நிறைவேற்றிக்காட்டிய எங்கள் தலைவர் காமராஜரை திராவிட அனுதாபிகள் நாங்கள் புகழாமல் வேறு யார் புகழ்வார்களாம்! 

திமுகவும் காமராஜரும் எதிரெதிர் நிலையிலிருந்து அரசியல் செய்தார்கள். எனவே திமுக அபிமானிகள் காமராஜருக்கு எதிரானவர்கள் என்று எழுதுவதைப் பார்த்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.  திமுக வை தந்தை பெரியார் எதிர்த்ததை விடவா வேறொருத்தர் எதிர்த்துவிடப் போகிறார்??  பெரியாருக்கு ஒன்று என்றால் உடனே வந்து மல்லுக்கட்டுபவர்கள் திமுகவினர் தான். காமராஜருக்கு மணி மண்டபம் கட்டி அழகு பார்த்தவரும் கலைஞர் தான்,  அவர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசாணை வெளியிட்டவரும் கலைஞர் தான் .

அஜீத்தை பாராட்ட வேண்டுமானால் விஜயை திட்டுகிற ரசிக குஞ்சு மனோபாவம் கொண்டவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள்.  அவர்கள் தான் திமுகவை திட்டுவதற்கு காமராஜரை பயன்படுத்திக்கொள்வார்கள்.  

பெரியார் திமுகவை எதிர்ப்பதற்காக காமராஜரை ஆதரித்தார் . ராஜாஜி காமராஜரை வீழ்த்துவதற்காக அண்ணாவுடன் கை கோர்த்தார்.  இன்று திமுகவினரும் திமுக அபிமானிகளும் ராஜாஜியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களா பெரியாரை கொண்டாடுகிறார்களா?  தேர்தல் அரசியலையும் கொள்கை அரசியலையும் போட்டு குழப்பிக்கொள்கிற ஆளில்லை நான்.  ஆமாம் நான் திமுக அபிமானி தான். ஆனால் அதிமுக வா  சாதிய  தமிழ் நாஜிக்களா என்று ஒரு சூழ்நிலை வந்தால் நான் தயங்காமல் 69 சதவீத இடப்பங்கீட்டுக்காக போராடி வருகிற சமூகநீதி காத்த வீராங்கனை செல்வி ஜெயலலிதா அம்மையாரைத்தான் முழு மனதோடு ஆதரிப்பேன்...!

No comments:

Post a Comment