Tuesday, 30 May 2017

கலைஞர் வாழ்த்து

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த தங்கப் புதல்வா!
நெஞ்சகத்தை வென்றெடுத்த எங்கள் முதல்வா!

எழுபது வருடங்கள் தாண்டி  எழுதும் கலைஞர்!
என்றென்றும் எங்களுக்கு இளைஞர்!

ஈரோட்டு பாசறையில் கற்றவன் நீ!
பாராட்டு புகழுரை பல பெற்றவன் நீ!

சூரியனை எழுப்பிவிடும் சூரியன் நீ!
சுயமரியாதையை எழுப்பிவிடும் வீரியம் நீ!

ஆண்டு பல ஏறும்போது வயது கூடும்!  உனக்கோ
ஆண்டு பல ஏறும்போது வனப்பு கூடும்!

வாழ்க்கை தோறும் வரலாற்று மாணவன் நீ!
வாழும்போதே வரலாறு மானவன் நீ!

தீந்தமிழ் பைந்தமிழ் செந்தமிழ் - நீ
சீர் இளமை திறம் வியக்கும்  கன்னித்தமிழ்!

அனைத்து சாதி அர்ச்சகராக சட்டம் போட்டாய்!
அனைத்து சாதி சேர்ந்துவாழ திட்டம் போட்டாய்!

பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத்தந்தாய்!
எங்களுக்கு மொழியுரிமை கற்றுத்தந்தாய்!

துறைமுகத்தின் வழிகாட்டும் கலங்கரைவிளக்கம் நீ!
அண்ணாதுரை முகத்தின் வழிகாட்டும்  விளக்கு நீ!

வாழ்த்துகளும் வசவுகளும் சளைத்ததில்லை!
எந்நாளும் எதுவுமுனக்கு சலித்ததில்லை!

சமூகநீதியின் வேர் தாங்கும் ஆலமரம்!
சாமானியனும் வந்து போகும் கோபாலபுரம்!

கல்லக்குடி  பெயர் பிறக்க  தலை கொடுத்தாய்!
வள்ளுவனின் பெயர் சிறக்க சிலை வடித்தாய்!

பாளையங்கோட்டை சிறையினிலும் ஒரே முகம்!
ஜார்ஜ் கோட்டை அறையினிலும் ஒரே முகம்! 

வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே நிலை!
என்றும் மாறா ஜென் நிலை உன் நிலை!

நின்ற இடம் அனைத்திலுமே வென்றவன் நீ!
சென்றவிடம் தடம் பதித்து நின்றவன் நீ!

அவ்வப்பொழுது எங்களுக்கு ஆட்சித்தலைவன்!
எப்பொழுதும் எங்களுக்கு மீட்சித்தலைவன்!

மூப்பு வந்ததாலே வாழ்வில் சலிப்பு வருமோ?
சலிப்பின்றி வாழ்வோர்க்கு மூப்பு வருமோ?

தித்திக்கும் முத்தமிழ்க்கு மூப்பு ஏது?
அத்தமிழும் மோகம் கொள்ளும் உன் பேனா மீது!

நீண்ட தமிழ் மணக்கும் ஒரு பாயிரமே!
ஆண்டு பல வாழ்க இன்னும் ஆயிரமே!

#முத்தமிழுக்கு_ஏது_மூப்பு

Monday, 29 May 2017

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இளைஞர்கள் உணர்ச்சிவசப்படாமல் ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமாக அணுகி புரிந்துகொள்ளவேண்டும். 

நாம் வாழ்கிற இந்த பூமி பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு மனிதன் வாழக்கூடிய பிரதேசமாக மாறியது.  பிறகுதான் நியான்டர்தால் இனம் வந்தது.  மனிதர்கள் ஆரம்பத்தில் ஆடைகள் ஏதுமின்றி கற்கால மனிதர்களாக இருந்தனர்.  யார் வேண்டுமானாலும் யாரையும் புணர்ச்சி செய்வார்கள்.  அம்மா பையன் அண்ணன் தங்கச்சி என்ற பேதமெல்லாம் கிடையாது.  அதன்பிறகு மெல்ல மெல்ல நாகரிகம் எட்டிப்பார்த்து பல்வேறு மொழி இனக்குழுக்களாக வளர ஆரம்பித்தது மனித இனம். 

எல்லா இனங்களையும்  போல  தமிழினமும் அப்படித்தான் வளர்ந்து வந்தது.  பல்வேறு குழுக்கள்,  நிலப்பகுதிகள்,  பேரரசர்கள்,  சிற்றரசர்கள்,  குறுநில மன்னர்கள் இப்படி பல பிரிவுகள்.  இந்த ராஜா படை திரட்டிப்போய் பக்கத்து ஊர் ராஜா வோடு சண்டை போட்டு அவன் பொண்டாட்டிகள்,  ஆடு மாடு எல்லாத்தையும் கடத்திட்டு வருவான்.  வேறொரு ராஜா வந்து இவன் சொத்துகளை கொள்ளை அடிச்சிட்டு போவான்.  இப்படித்தான் உலகம் பூராவும் இருந்தது . நம் தமிழ் முன்னோர்களும் இப்படித்தான் இருந்தார்கள்.  ராஜாக்களுக்கு போர் அடிச்சா மகிழ்விக்க கலைகள் தோன்றின.  சமயங்கள் வளர்ந்தன .

நாம் தமிழினம் என்பதால் நமக்கு எக்ஸ்டிரா நாலு கை நாலு கால் இருந்தது கிடையாது.  ஐரோப்பாவில் ஏற்பட்ட இயந்திரப்புரட்சி காரணமாக அறிவியல் மெல்ல மெல்ல உலகின் அனைத்துப்பகுதிகளையும் சென்று சேர்ந்தது.  லோக்கல் ல நடந்த சண்டை இன்டர்நேஷனல் அளவுக்கு விரிவடைந்தது.  கிட்டத்தட்ட உலகின் பூரா பகுதியுமே சண்டை,  சச்சரவு,  பசி பஞ்சம் கடந்துதான் மேலேறி வந்தது.  நோய்கள் வந்து கொத்துகொத்தாக மனிதர்கள் செத்து மடிந்தார்கள்.  சண்டையில் செத்தவன் மீதி. 

அறிவியல் வளர வளரத்தான் மனித குலம் தழைத்தது . அதே அறிவியலை மனிதன் சுயலாபத்திற்காக பயன்படுத்தி மனித குலத்தை அழிக்க முற்பட்டாலும் அறிவியல் தான் மனித குலத்தை காப்பாற்றி வளர்த்தது. 

என்னோட அம்மா தான் உலகத்திலேயே அழகான அம்மான்னு நான் நெனச்சிக்கறதில்லையா அதுபோல நம்முடைய இனம் தான் உலகின் சிறந்த இனம் என எண்ணி பெருமை படுவதில் தவறேதுமில்லை.  ஆனால் அதற்காக இப்போது உள்ள எல்லா அறிவியலையும் ஏற்காமல்,  "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல " என வெட்டி பெருமை பேசுதல்,  மாட்டு சாணி தான் சர்வரோக நிவாரணி,  பிரசவத்திற்கு ஆஸ்பத்திரி போகக்கூடாது ஊட்டுலேயே புள்ளை பெத்துக்கனும்,  நம் முன்னோர்கள் எந்த ஆஸ்பத்திரிக் கு போனார்கள் என கேட்பது,  குழந்தைகளுக்கு தடுப்பூசி போடக்கூடாது, கண் பார்வை சரியா தெரியலன்னா கண்ணாடி போடக்கூடாது  இப்படியெல்லாம் சொல்வது அல்லது இப்படி பிரமோட் செய்கிற கும்பலிடம் "அட ஆமாம் ல " என மயங்கி ஆதரவளிப்பது போன்ற காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.  இதுபோன்ற டுபாக்கூர் பேர்வழிகளிடம் இளைஞர்கள் கவனமாக இருக்கவேண்டும் . உங்கள் தாத்தா அப்பா க்களுக்கு கிடைக்காத வசதி உங்களுக்கு கிடைத்துள்ளது.  கல்வி கற்றுள்ளீர்கள்,  எந்த நேரமும் இணையத்தின் மூலம் எதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.  பகுத்தறிவை பயன்படுத்தவேண்டும்.  எதையும் ஏன் எதற்கு என கேள்வி கேட்டு பழகவேண்டும்.