Thursday, 15 September 2016

அண்ணா : தலைவனுக்கான இலக்கணம்

அறிஞர் அண்ணா,  ஏன் தனிநாடு கோரிக்கையை கைவிட்டார்..??

தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையுடன் 1949 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய அண்ணா,  அதன்பிறகு தனது கொள்கையில் சமரசம் செய்துகொண்டு தனி நாடு கோரிக்கையை கைவிட்டதாக இன்றும் சிலர் விமர்சனம் செய்வது உண்டு.

சீனா வுடனான போருக்குப் பின்னர் இந்திய நடுவரசு,  1963 ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 16வது சட்ட திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் செய்தது.  அதன்படி இந்தியாவில் பிரிவினை கோருபவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது.  இதற்குப்பிறகு அண்ணாவுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. 

1. தனிநாடு கோரிக்கையில் உறுதியாக இருத்தல்.  ஆனால் தேர்தலில் போட்டியிட முடியாது .

2. தனிநாடு கோரிக்கையை கைவிட்டு தேர்தலில் நின்று மக்கள் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றி திராவிட கொள்கைகளை சட்டமாக்குதல்

அண்ணா தனி நாடு கோரிக்கையை கைவிடாமல் இருந்தால் என்ன செய்திருக்க முடியும்?  ஒன்று கடைசிவரைக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாமல் அறவழிப் போராட்டங்களை செய்திருக்கவேண்டும் . இல்லையேல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைக் கையில் எடுக்கவேண்டும்.  அண்ணாவுக்கு ஆயுதத்தின் மீது ஒரு போதும் நம்பிக்கை இல்லை . கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்பது தான் அவருடைய அறிவுரை.  தவிர ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தால் என்னவாகும்?  அண்ணாவுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கு காரணமாக நிச்சயம் பெருமளவிலான மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்பார்கள்.  இந்திய ராணுவத்தை வெற்றி கண்டு கிடைக்கிற நாட்டுக்கு அவர் அதிபதியாக கூட ஆகியிருக்க முடியும்.  ஆனால் அதற்குள் தன்னை நம்பி வந்த மக்களில் பெரும்பகுதியினர் உயிரை விட்டோ,  உடல் உறுப்புகளை உடைமைகளை இழந்தோ நிர்க்கதியாக  இருப்பர் என்ற உண்மையையும் அவர் உணராமல் இல்லை. 

தன்னை நம்பி வந்த மக்களை காவு கொடுத்து அந்த பிணக்குவியலின் மீது சிம்மாசனத்தைப் போட்டு அரியணை ஏற அண்ணா விரும்பவில்லை.  அன்று அண்ணா எடுத்த முடிவு தான் தமிழகத்தின் வரலாறையே மாற்றிப்போட்டது.  ஒட்டுமொத்த தமிழர்களையும் நிம்மதியுடன் தலை நிமிர வைத்தது.  ஜனநாயகத்தின் மூலமே கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என மனதார நம்பினார்.  அதை நிறைவேற்றியும் காட்டினார்.  மாநில சுயாட்சி,  மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை கையில் எடுத்தார்.  தேர்தலில் வென்று வந்தவுடன் முதல் காரியமாக மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என மாற்றி சட்டமாக்கினார்.  தமிழகத்தில் கட்டாயம் இந்தி படித்தாக வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் உத்தரவை மாற்றி இருமொழிக்கொள்கையை சட்டமாக்கினார். 

இன்று அண்ணா தனது தனிநாடு கோரிக்கையை கைவிட்டார் என்று குற்றம் சுமத்திக்கொண்டே தேர்தலில் நிற்கிற சில அமைப்புகளை பார்த்தால் உண்மையிலேயே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.  ஏனென்றால் 16 வது சட்ட சீர்திருத்தத்தின் படி இந்திய பிரிவினையை கோரமாட்டேன் என பிரமாணம் எழுதிக்கொடுத்துவிட்டு வந்து தேர்தலில் நிற்பவர்கள் அண்ணா மீது அப்படியொரு குற்றச்சாட்டை வைத்தால் நகைப்பு வராதா? 

அண்ணாவின் மிகச்சாதுரியமான அந்த முடிவு தான் அவரை மகத்தான தலைவனாக அடையாளங்காட்டுகிறது.  தலைவன் என்பவன் தன்னுடைய மக்களை இழந்தாவது வெற்றியை பெறுபவன் அல்லன்.   தன்னை நம்பி வந்த மக்களை கொல்லாமலேயே,  அவர்களை இழக்காமலேயே தன்னுடைய சிறிய நன்மையை தியாகம் செய்து மக்கள் நலன் எனும் பெரிய நன்மையை முன்னெடுத்துச் செல்பவனே உண்மையான தலைவன்.  அறிஞர் அண்ணா - இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவன்! இன்று தமிழகத்தில் ரத்த ஆறு ஓடாமல்,  தமிழர்கள் வீடுகளில் மரண ஓலம் ஒலித்துக்கொண்டு,  படிக்க வேண்டிய பிள்ளைகள் ஆயுதங்களை சுமந்துகொண்டு,  தாய்மார்கள் பிள்ளைகளை இழந்து,  பெண்கள் கணவனை இழந்து,  வீடிழந்து நாடிழந்து போன்ற கொடுமைகள் ஏதுமின்றி நிம்மதியுடன் வாழ முடிகிறது என்றால்,  அதற்காக நாம் அனைவரும் அறிஞர் அண்ணா என்ற தலைவனுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் என்றால் அது மிகையாகாது ...!

Tuesday, 13 September 2016

ஹிந்தி எனும் மாயை

"ஹிந்திய" மாயை
---------------------------------

தமிழ்நாட்டில் ஒரு ஏழைக்குழந்தையால் இந்தி படிக்க முடியுமா? வசதி படைத்த பிள்ளைகள் வேண்டுமானால் தனியார் பள்ளிகளில் காசு கொடுத்து படிக்கமுடியும் என்ற அங்கலாய்ப்பை பல நேரங்களில் நான் கேட்டிருக்கிறேன்.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இந்தி படிப்பதே ஒரு வித மாயை  தான். எனக்குத்தெரிந்தே நிறைய பெற்றோர்கள் ஆங்கில வழிப்பாடத்தில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். Language 2 என்று வரும்போது இந்தியை தேர்வு செய்கிறார்கள். இதற்கு அவர்கள் தருகிற விளக்கம் என்னவென்றால், ஆங்கில வழியில் படிப்பதால் ஆங்கிலம் அத்துப்படி ஆகிவிடுகிறது. அதுபோக தமிழ் ஒன்றும் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்ளவேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இருக்கிறோம், வீடு மற்றும் பொது இடங்களில் தமிழ் பேசுவதை வைத்தே தமிழை பேசிவிட முடியும். ஆகவே அதற்கு சிரத்தை எடுக்கவேண்டாம் என்பது அவர்கள் எண்ணம். தமிழ் இடத்தில் இந்தியை வைத்தால் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடிகிறது. போட்டிகள் நிறைந்த இந்த வியாபார உலகில் அது நாளை ஒருவேளை பயன்படலாம் என்கிறார்கள்.

பெற்றோர்களின் இந்த நியாயமான(!) ஆசையில் என்ன தவறு என்று தோன்றலாம்.  தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படிக்காவிட்டால் எப்படி என்று  நரம்புகளை புடைக்காமல் ஆற அமர இதை அணுகலாம்.  இந்தியை கூடுதல் பாடமாக எடுத்துப்படிக்கும் மாணவர்கள் உண்மையிலேயே இந்தி பேசுகிறார்களா என்றால் கிடையாது. எப்படி நாம் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் மொழியில் படித்தவர்கள் ஆங்கிலம் பேச வரவில்லையோ அதுபோலவே ஆங்கில வழியில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பவர்களாலும் இந்தியை பேச வராது. எனக்குத்தெரிந்த ஒருத்தர் ஆறாம் வகுப்பிலிருந்து இந்தியை ஒரு பாடமாக படித்தார். வழக்கம்போல அவருக்கு இந்தி பேச வராது. அதே நபர் மேல் படிப்புக்காக பூனே சென்று ஒரு வருடம் படித்துவிட்டு வந்தார். இங்கு வந்தவுடன் அவர் சரளமாக இந்தி பேசுகிறார், மராத்தியையும் தன்னால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் என்கிறார். ஏழு வருடங்களாக படித்தும் பேச வராத இந்தி ஒரே வருடத்தில் வந்துவிட்டது. என்னுடைய மாமனார் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். அவருக்கு ஆங்கிலம் பேச வராது. ஆனால் இந்தியில் சரளமாக பேசுவார். எப்படி என்றால் டெல்லியில் ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறார் அதுவும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு. இங்கு வந்து வட இந்தியர்களுடன் அவ்வப்போது பேசி டச் விடாமல் வைத்திருக்கிறார். ஆக தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பதால் ஒருத்தர் இந்தி பேசிவிடமுடியாது.

சரி பேச முடியாவிட்டால் என்ன எழுத முடிகிறதல்லவா,  எழுத்துகளை படிக்கமுடிகிறதல்லவா என்று கேட்கலாம். சரி அதன் அவசியம் தான் என்ன?  தமிழ்நாட்டில் தமிழ் மொழியை எழுத படிக்கத்தெரியாமலேயே நம்மால் சர்வைவ் பண்ண முடியும் என்று நினைத்துத்தானே இந்தியை தேர்வு செய்கிறார்கள்? தமிழ் எழுத படிக்கத்தெரியாமலே இவர்களால் சர்வைவ் ஆக முடியுமென்றால் இந்தி எழுத படிக்க தெரியாமல் முடியாதா? 

அலுவலகங்களில் இந்தி மொழி எழுத படிக்க அறிந்திருப்பதால் எந்த பயனாவது இருக்கிறதென்றால் அதுவும் இல்லை. எனக்குத்தெரிந்து எந்த தனியார் அலுவலகங்களிலும் தங்களது ஈமெயில், கடிதப்போக்குவரத்து, அப்பாயின்மென்ட் ஆர்டர் உள்ளிட்ட எந்த தொடர்புக்கும் ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியிலோ அல்லது தமிழ் மொழியிலோ இதுவரை ஒரு ஈமெயில் கூட நான் பார்த்ததில்லை. எல்லாமே ஆங்கிலத்தில் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டது. டெல்லியில் உள்ள கிளையில் தங்களுக்குள் இந்தியில் பேசுவார்கள். சென்னையில் நாங்கள் தமிழில் பேசிக்கொள்வோம். ஆனால் Official communication என்று வரும்போது ஆங்கிலம் தான்.

இல்லை பணி நிமித்தமாக தமிழ்நாடு தாண்டி வட மாநிலங்களுக்கு சென்றால் இந்தி அவசியம் என்று சொன்னால், பள்ளிப்படிப்பையே சரியாக படித்திராதவர்களே தங்கள் வேலையின் பொருட்டு ஒரு மொழியை கற்றுக்கொள்கிறார்கள் என்றால் நன்றாக படித்த இவர்களால் முடியாதா? இங்கிருந்து அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்கிறவர்கள் போகும்போதே அரபி கற்றுக்கொண்டா செல்கிறார்கள்? இல்லை வட மாநிலங்களில் இருந்து இங்கு முதலாளிகளாக வருகிற மார்வாடிகள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை வரும்போதே தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்களா?

ஆங்கில வழிப்பள்ளிகளில் கூட இந்தியை யாரும் படிக்கக்கூடாது என்று சொல்வதல்ல என் நோக்கம். ஆனால் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை படிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தனக்கு இந்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்று அங்கலாய்க்கிறார் நம்முடைய பிரதமர். ஒன்றும் ஆகியிருக்காது. டீ விற்கும்போதே அவரால் இந்தியை கற்றுக்கொள்ள முடிந்தது என்றால் மற்றவர்களால் முடியாதா? அவசியம் ஏற்பட்டால் யாராக இருந்தாலும் கற்றுக்கொள்வார்கள் என் மாமனாரை போல.

ஆனால் அந்த அவசியம் இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்படவில்லை. இந்தி தெரியாமலேயே எல்லாத்துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. அதற்காக அந்த அவசியத்தை வலியத்திணிக்கலாமா? அதைத்தான் நம்முடைய நடுவணரசு இப்போது செய்கிறது.  இல்லையே இப்போது ஒன்றும் இந்தி திணிப்பு இல்லையே,  தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக படிக்கத்தேவையில்லையே என்று கேட்கலாம். நேரடித்திணிப்பு வேறு மறைமுகத்திணிப்பு வேறு. மத்திய அரசு பணித்தேர்வுகளை இந்தி மயமாக்குவது உள்ளிட்ட இந்தி திணிப்புகளை கையிலெடுக்கிறது.  பிறந்ததிலிருந்தே இந்தியில் புழங்கிய ஒருவரோடு இந்தியை ஒரு பாடமாக மட்டும்  எடுத்து படித்தவர்  இந்தி தேர்வுகளில் போட்டியிட்டால் என்னவாகும்? இது இந்தி பேசாத மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியல்லவா?  இதைத்தான் நாம் தடுத்தாகவேண்டும். இந்தியா எனும் நாடு துண்டாடப்படாமல் இருக்கவேண்டுமென்றால் அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்கவேண்டும். எல்லாவற்றையும் ஆட்சி மொழிகளாக்கவேண்டும். எப்படி மொழியைத்திணித்து பாகிஸ்தான் இரண்டு நாடுகளானதோ இந்தியாவும் பல நாடுகளாக மாறிவிட வாய்ப்புண்டு. வேடிக்கை என்னவென்றால் இந்தியை திணித்து இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பவர்கள் தங்களை தேச பக்தர்கள் எனவும்,  இந்தி திணிப்பை எதிர்த்து  நாட்டை பிளவுபடாமல் காக்க நினைப்பவர்களை பிரிவினைவாதிகள் என்றும் சொல்கிறார்கள்.  உங்களுக்கு எதுவேண்டும்?
ஒரு நாடு பல மொழிகளா அல்லது ஒரே நாடு ஒரே மொழியா?

#StopHindiImperialism