Sunday, 29 May 2016

அரசியல் பழகுவது எப்படி??

அரசியல் பழகுவது எப்படி??

நான் கவனித்தவரையில் நிறைய நண்பர்களுக்கு அரசியல் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதே சமயம் தங்களுக்கு எல்லா அரசியல் வரலாறுகளும் தெரியவில்லையே,  அது குறித்து படித்ததில்லை என்ற ஆதங்கமும் இருக்கிறது. எல்லோராலும் எல்லாவற்றையும் படித்துத் தெரிந்துவைத்திருக்க முடியாதுதான். முடிந்தவரை இனியாவது அவற்றை தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

இரண்டாவது நம்மை குழப்புகிற அடுத்த விஷயம் சித்தாந்தங்கள். திராவிடங்குறாங்க,  இந்துத்துவங்கறாங்க,  கம்யூனிசம்,  வலதுசாரி,  இடதுசாரி,  தமிழ்தேசியம்,  தலித்தியம் இப்படி ஏகப்பட்டவை இருப்பதால் இதில் யார் சொல்றது நல்லது எது கெட்டது என்ற சந்தேகமும் ஏற்படுகின்றன. அதுபோக அரசியல் கட்சிகள். திமுக,  அதிமுக,  காங்கிரஸ்,  கம்யூனிஸ்டுகள்,  பாஜக,  பாமக,  விடுதலை சிறுத்தைகள் என அதிலேயும் பல இத்யாதிகள்.  இவை எல்லாம் சேர்ந்து அரசியலை பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று நினைப்பவர்களைக் கூட பயமுறுத்துகின்றன.

அரசியல் பழகுவதற்கு நீங்கள் ஏதாவதொரு அரசியல் கட்சியில் இருந்தாக வேண்டும் அல்லது உங்களுக்கு ஏதாவதொரு கட்சி சார்பு இருக்கவேண்டும் என்று கூட அவசியம் இல்லை. "எனக்கு இந்த நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கனும்,  எல்லாரும் சரிசமமா வாழனும்,  யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை,  அதே சமயம் அதற்கான அரசியலையும் நான் பழகவேண்டும் என்ற ஆசை உள்ளது " என்று நினைப்பீர்களேயானால்,  Dont worry, நான் அதற்கு என்னாலான உதவி செய்கிறேன்.

அரசியல் பழகுவதில் பால பாடம்,  Basic rule என்னவென்றால் யாரை ஆதரிப்பது என்பதைவிட யாரை புறக்கணிக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.  இதற்கு ஒரு எளிமையான Formula சொல்லித்தருகிறேன்.

தமிழக அளவில் பெரியாரை தூற்றுபவர்கள்,  தேசிய அளவில் நேருவை தூற்றுபவர்கள் இவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள்.  இவர்கள் டிசைன் டிசைனாக பேசுவார்கள்,  சில சமயம் நேரடியாக சொல்லமாட்டார்கள் சுற்றிவளைத்து பேசுவார்கள்.  சமயங்களில் அட ஆமால்ல என நினைப்பது போல கூட இருக்கும்.  ஆனால் இவர்களை நண்பர்களாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாமே தவிர,  இவர்கள் பேசுகிற அரசியலை அடியோடு புறந்தள்ளவேண்டும். இந்த Basic rule ஐ நன்றாக புரிந்துகொண்டால் போதும்,  இனி நீங்கள் தாராளமாக அரசியல் பழகலாம்...!

Thursday, 19 May 2016

2016 சட்டமன்ற தேர்தல்

2016 தேர்தல் முடிவுகள் - ஒரு பார்வை
------------------------------------------------------------------

முதலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அதிமுகவிற்கு எனது வாழ்த்துகள்.  பொதுவாக தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை மக்கள் என்ன முடிவு தருகிறார்களோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை என்னால் அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திமுக தோற்றுள்ளது என்பதற்காக இதை சொல்லவில்லை.   130 - 100 என்பதற்கு பதிலாக அதிமுக 150 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருந்தால் கூட நான் அதை மக்கள் தீர்ப்பு என மகிழ்ந்திருப்பேன்.  இப்போது வந்துள்ள தீர்ப்பு மகிழ்வதற்கு அல்ல என்பதற்கு என்னிடம் சில காரணங்கள் உள்ளன.

அதிமுக ஆளுங்கட்சி எதிர்ப்பு அலையை வென்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது. 294 தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் மம்தா  220 தொகுதிகள் பெற்றுள்ளார் அல்லவா,  அதுதான் எதிர்ப்பை வென்ற அரசு.  100 தொகுதிகளில் வந்துள்ள திமுகவை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் கொள்ளமுடியாது.  தொழில் புரிவோர்,  சிறு வியாபாரிகள்,  ஓட்டுனர்கள்,  அரசு ஊழியர்கள் என இவர்கள் திமுக வர வேண்டும் என விரும்பினார்கள். அதே சமயம் பெண்கள் அதிகளவில் அதிமுகவிற்கே வாக்களித்துள்ளார்கள்.

ஜெ அம்மையார் தன்னுடைய மிகப்பெரிய பலமே பெண்கள் வாக்கு வங்கி என்பதை நிரூபித்துள்ளார். இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம். திமுகவும் அதன் காரணமாக பெண்களை கவர்ந்துவிடலாம் என எண்ணி அழுத்தம் திருத்தமான உறுதியுடன் மதுவிலக்கு திட்டத்தை வலியுறுத்தியது. ஆனால் அது பெண்கள் மத்தியில் எடுபடவில்லை. மாறாக தமிழகத்திலுள்ள 45 சதவீத குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் Backfire ஆகிவிட்டுள்ளது. "படிப்படியாக மதுவிலக்கு " என்று அதிமுக வின் அறிவிப்பே மதுவிலக்கு இல்லை என்பதை நாசூக்காக அறிவித்தது. அந்த கவர்ச்சிகரமான அறிவிப்பில் திமுகவிற்கு வழக்கமாக போடுபவர்கள் கூட மாற்றி போட்டிருக்க வாய்ப்புண்டு.

அடுத்ததாக தேர்தல் அறிக்கை. நடுநிலையான அனைவருக்குமே தெரியும் அதிமுக வை விட திமுகவின் தேர்தல் அறிக்கை தான் மிகச்சிறப்பானது என்று. அதிமுக தேர்தல் முடிய பத்து நாட்கள் உள்ள போது  ஏதோ கடமைக்கு விட்ட அறிக்கை போல இலவசங்களை அடுக்கியிருந்தது.  மக்கள் தேர்தல் அறிக்கையை எல்லாம் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. விளைவாக கட்சிகள் தேர்தல் அறிக்கைக்கென மெனக்கெடுவதை நிறுத்திவிடுவார்கள். 

முக்கியமான விஷயம் ஜெ வின் ஆட்சி பாணி. ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒருவரிடமே குவிக்கப்படுவது நல்ல நிர்வாகமல்ல. தேர்தல் பிரச்சாரத்தைக் கூட அவரால் ஜனநாயக முறைப்படி செய்ய முடியவில்லை.  ஆனால் திமுக தரப்பில் மக்களோடு மக்களாக பயணித்தனர். இருப்பினும் வந்த முடிவுகளோ அதிமுகவிற்குத்தான் சாதகம். இது ஏற்படுத்தப்போகிற விளைவுகள் ஆபத்தானவை. ஜெ பாணி அரசியல் தான் தமிழகத்திற்கு லாயக்கு என்பது போல ஆகிவிடும். அவர் மீண்டும் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என நினைத்து இன்னும் அதிகமாக அதே பாணியையே கையாள்வார். அரசியல் செய்பவர்கள் தேர்தலின் போது மட்டும் மக்களை தேடி வந்தால் போதும் போல என்ற விரக்தி சிந்தனையை மற்ற கட்சிகளிடையே வளற ஆரம்பிக்கும். இது மக்களாட்சிக்கு நல்லதல்ல.   தொழில் வளர்ச்சியின்மை,  பொருளாதார வீழ்ச்சி,  திட்டங்கள் நடைபெறாமல் கிடப்பது,  விலைவாசி உயர்வு என பல அதிருப்திகள் இருந்தாலும் தேர்தலின் போது பணம் செலவழித்தால் மறக்கடித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டில் தலையெடுத்துள்ள ஆணவக்கொலைகள் விவகாரம் ஒரு புறம் இருக்க,  கொங்கு மண்டலம் முழுக்க அதிமுக வின் கோட்டையாக மாறியிருப்பது ஆபத்தானது.  மிக துணிச்சலான லேடி என்ற பெயரெடுத்த முதல்வர் கடந்த ஐநுதாண்டுகளில் ஆணவக்கொலைகள் பற்றி என்ன கருத்து தெரிவித்துள்ளார்?  ஒன்றுமில்லையே.  ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் தைரியமாக வாட்சப் ஆடியோ ரிலீஸ் செய்கிற அளவிற்கு சாதியத்தை கண்டும் காணாமல் இருக்கிற நிலை தொடருமானால் அது ஆபத்தானது இல்லையா?  அதே கொங்கு மண்டலத்தில் பாஜக வும் தனது வாக்கு வங்கியை பலப்படுத்தி வருவதும் ஆபத்தானது.  இனிமேல் அரசியல் கட்சிகள் அங்கு நடைபெறுகிற சாதிய வெறியாட்டங்களை கண்டும் காணாமலே இருப்பார்கள்.

அடுத்ததாக திமுகவின் தவறாக நான் பார்ப்பது காங்கிரசிற்கு 41 தொகுதிகளை வழங்கியது. அதில் நான்கில் ஒரு இடங்களைத்தான் காங்கிரஸ் வென்றுள்ளது. 41ல் இருபது இடங்கள் திமுக நின்றிருந்தால் இன்னும் பத்து இடங்களை கூடுதலாக வந்து சம பலம் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.  அதுபோக மூன்றாவது அணி.  அந்த அணி 30 இடங்களில் வந்திருந்தால் கூட பரவாயில்லை.  அட்லீஸ்ட் ஒரு கட்சி படுதோல்வி அடையக்கூட செய்ய முடியவில்லை.  இதன் விளைவு என்னவென்றால் திமுக அதிமுக விற்கு மாற்று என்ற கோஷத்தை குழி தோண்டி புதைத்துவிட்டது. இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மூன்றாவது அணியால் தலை தூக்க முடியாது. அது மட்டுமின்றி விடுதலைச்சிறுத்தைகள்,  இடதுசாரி கட்சிகள் இவைகளின் நிலைமை இனி கவலைக்கிடமாகிவிடும். ஆக மொத்தம் திமுக அதிமுக விற்கு மாற்றும் கிடையாது,  அதேவேளை  இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது என்பது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் திமுகவையே தங்கள் முதன்மை எதிரியாக பார்த்ததின் விளைவு இது.

தோல்விகளுக்கு எவ்வளவு காரணங்கள் தேடினாலும் அவை நிராகரிக்கப்படும் என்பது தெரிந்ததே. அதற்காக தோல்விக்கான காரணத்தை ஆராயாமலும் இருக்கமுடியாது.  அப்புறம் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இப்படியொரு வெற்றியை தந்ததற்காக ஜெ அம்மையார் உண்மையிலேயே தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்கவேண்டும். குறைந்தபட்சம் எவர்சில்வர் தட்டிலாவது வைத்து தாங்குகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் ...!