Wednesday, 16 December 2015

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த வரலாற்றுச்சிறப்புவாய்ந்த ஒரு அரசாணையை தற்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதைக் கண்டு தமிழகத்தின் பெரும்பாலான ஆட்கள் எதிர்ப்புத்தெரிவிப்பதையும் சிலர் உள்ளுக்குள் மகிழ்வதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

கலைஞரின் அரசாணை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதற்கு முன்னால் நம்முடைய கோயில் வழிபாட்டு முறையை பார்ப்போம். "பெரிய " கடவுள்களான விஷ்ணு,  சிவன்,  முருகன்,  விநாயகர் போன்ற கடவுள்களின் சந்நிதிகளில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருப்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கோயில் கருவறையினுள் நுழைகிற உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. "லோக்கல் " சாமிகளான மாரியாத்தா,  செல்லாத்தா,  முனிசுவரன்,  அய்யனார்,  சுடலைமாடசாமி போன்ற சாமிகளுக்கு பிராமணர் அல்லாத பிற சாதியினர் பூஜை செய்வார்கள்.  இதுதான் இங்கே நடைமுறை. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அர்ச்சகர் ஒருவேளை அய்யனாருக்கு தான் பூஜை செய்ய விரும்பினால் அவருக்கு அந்த உரிமை உண்டு. அவர் அதை செய்ய முடியும். ஆனால் முனிசுவரனுக்கு பூஜை செய்கிற பூஜாரி (அவர் அர்ச்சகர் இவர் பூஜாரி - இந்த வித்தியாசம் முக்கியம்)  வெங்கடாசலபதி க்கு பூஜை செய்ய விரும்பினால் அது நடக்காது. அவருக்கு அந்த உரிமையில்லை.

கலைஞர் கருணாநிதி இந்த விசயத்தில் பிராமணர்கள் மட்டுமல்ல அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இயலும் என்று ஒரு அரசாணையை பிறப்பிக்கிறார். "கருணாநிதிக்கு ஏன் புத்தி இப்படி போகிறது?  பிராமணர்களுக்குத்தானே எல்லா மந்திரங்களும் தெரியும்?  மற்ற சாதியினர் போனால் என்ன செய்வார்கள்? " என்று உங்களுக்கு தோன்றலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றால் யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதல்ல. ஒருத்தருக்கு உண்மையிலேயே மிக அதிகமான கடவுள் பக்தி இருக்கிறது,  அவரால் அர்ச்சகர் ஆக முடியுமா என்றால் முடியாது. கோயில் கருவறைகளில் கடவுளுக்கு ஓதப்படும் மந்திரங்களை ஒருத்தர் (எந்த சாதியினராக வேண்டுமானாலும் இருக்கலாம்)  முறையாக கற்க வேண்டும். அவர்களை அரசாங்கம் முறையாக கண்காணிக்கும். அவர்களுக்கு பயிற்சி தருகிறவர் இன்னார் முழுப்பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கு தகுதி பெற்றுவிட்டார் என்று சான்று அளிக்கப்பட்ட பிறகே தான் அவரால் அர்ச்சகராக முடியும். எப்படி ஒரு கிறித்தவர் பாதிரியாராக வேண்டுமென்றால் அதற்கான முறைப்படி படித்து பயிற்சி பெற்று ஆகிறாரோ அதே போலத்தான்.  ஆக ஒரு பிராமணருக்கு என்ன்ன்ன மந்திரங்கள் தெரியுமோ அது இவருக்கும் தெரியும். ஒரேயொரு வித்தியாசம் அவருக்கு பூணூல் இருக்கும் இவருக்கு இருக்காது அவ்வளவு தான்.

இதை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது. நீதிமன்றம் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கோயில்கள் இயங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆகம விதி என்றால் என்னவென்று குழம்பவேண்டாம்,  வழக்கம்போல பெரிய கடவுள்களின் கருவறைகளில் பிராமணர்கள் தான் நுழைய இயலும், மற்றவர்கள் நுழைந்தால் தீட்டு பட்டுவிடும்  என்பதே அந்த விதி. அவரும் மனிதர் இவரும் மனிதர்,  அவருக்கு தெரிந்த எல்லா மந்திரங்களும் இவருக்கும் தெரியும். ரெண்டு பேருமே மிகுந்த கடவுள் பக்தி உடையவர்கள். குளித்துவிட்டு சுத்தபத்தமாகத்தான் ரெண்டு பேருமே பூஜை செய்ய போகிறார்கள். அப்படியிருக்க அவர் நுழைந்தால் கடவுள் ஏற்றுக்கொள்வார் இவர் போனால் தீட்டாக்கி விடுவார் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுதான் ஆகம விதி.

கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதி எதற்காக இந்த அரசாணையை வெளியிடவேண்டும்?  எந்த சாதியினர் அர்ச்சனை செய்தால் அவருக்கென்ன வந்தது என்று கேட்கலாம். கருணாநிதிக்கு உண்மையிலேயே எல்லா சாதியினரும் அர்ச்சனை செய்யவேண்டுமென்ற ஆசையெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் எந்த சாதியை பல நூற்றண்டுகாலமாக சாதியின் பெயரல் தீட்டு தீட்டு என்று சொல்லி கோயிலுக்கு உள்ளே கூட நுழைய முடியாமல்  மறுக்கப்பட்டர்களோ,  அந்த தலித் மக்களை பிராமணர்களுக்கு இணையாக,  கோவிலுக்குள் என்ன கருவறையிலேயே  நுழைவதை காண அவர் விரும்பினார். ஆனால் ஆதி திராவிடர்களும் அர்ச்சகராகலாம் என்று அவரால் சட்டம் போட முடியாது. அதனால் தான் அனைத்து சாதியினரும் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றுகிறார். திராவிட பஜகோவிந்தமான கருணாநிதியின் லீலைக ளை நிஜ பஜகோவிந்தங்களால் புரிந்துகொள்ள முடியாதா என்ன?  ஒரு தலித் தங்களுக்கு இணையாக கோயில் கருவறையில் நுழைவதை அவர்களால் பொறுக்கமுடியவில்லை. எனவே தங்களது பஜகோவிந்த தனத்தின் மூலமாக அதை முறியடித்துள்ளார்கள். திராவிட பஜகோவிந்தமான கருணாநிதி இதை முறியடித்து மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.